Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழக முதலமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சாதாரண கைது நடவடிக்கைக்கும் மிசா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுக்கும் வேறுபாடு உள்ளது.
சாதாரண வழக்குகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும்.
ஆனால், மிசா சட்டத்தின் கீழ் எவ்வித வழக்கும் இன்றி நேரடியாக சிறையில் அடைக்க முடியும்.
இந்த அடிப்படைச் சட்ட அறிவு கூட தற்போதைய முதலமைச்சருக்கும், சட்ட அமைச்சருக்கும் இல்லை. சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை அவர்கள் கையாண்ட விதம் வெட்கக்கேடானது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது தற்போதைய அரசு தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி வருகிறது.
இதனை காரணம்காட்டி மின் வாரியத்தை அதானி குழுமத்திற்கு தனியார்மயம் ஆக்குவதற்காகவே இந்த செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, அதற்குப் பின்புலமாக மின் கட்டணத்தை 25% முதல் 50% வரை உயர்த்த திட்டமிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
சேலத்தில் குடிநீர் விநியோகம் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டு விட்டது, தூய்மைப் பணியாளர்களின் பணிகளும் அவுட்சோர்சிங் முறையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போராடும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேச அரசுத் தரப்பு மறுத்து வருகிறது .
முதலமைச்சரின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முறையான வழிகாட்டுதல்களின்படி அமையவில்லை.
பொதுவாக முதலீடுகளை ஈர்க்கச் செல்லும்போது துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் முன்னரே சென்று கூட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும், ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை.
மேலும், தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை முன்னிலையானது முந்தைய திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அடித்தளம்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முறையான பேசும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சபாநாயகர் நடுநிலையின்றி ஆளுங்கட்சியினரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேச முற்படும்போது, ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து வரும் துண்டுச் சீட்டுகளைப் பார்த்துவிட்டு, எதிர்க்கட்சியினரைப் பேசவிடாமல் சபாநாயகர் தடுத்துவிடுகிறார்.
ஆளுங்கட்சி ரீல்ஸ் போடுவதற்காகவே சட்டமன்ற நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது .
கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் , நான் சபாநாயகராக இருந்த போது எனது நிர்வாகத்தில் தலையிட்டது கிடையாது. ஆனால் இன்று அப்படி இல்லை சபாநாயகர் முதல்வரின் பிடியில்தான் உள்ளார்.
பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டம் தேவையற்றது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கப்பட்டதாக கூறி ஊழல் என்றனர். தற்போது ₹20 முதல் ₹30 ஆக உயர்த்தப்பட்டு தினசரி பல கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள சமுத்ரா மைன்ஸ் அண்ட் மினரல்ஸ்’ என்ற நிறுவனத்தின் மூலமாகத் தமிழகத்தின் கனிமவள உரிமங்கள் வழங்கப்படுகிறது.
இதில் முதலமைச்சரின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு ரெட்டி மற்றும் சுஜய் ரெட்டி ஆகியோர் மூலமாக செயல்பட்டு ₹2 கோடி முதல் ₹10 கோடி வரை லஞ்சமாகப் பெற்று வருகின்றனர்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரர் ஜார்ஜ் ரெட்டியின் மகன்களான அனில் ரெட்டி, சுனில் ரெட்டி ஆகியோருடன் இணைந்து, ஆந்திராவைச் சேர்ந்த 15 மதுபான நிறுவனங்களுடன் ₹5,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்பணத்தை கொண்டுதான் முதல்வர் லண்டன் செல்வதாக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எனவே இந்த ஆட்சியில்
ஊழல், லஞ்சம் மிக அதிகமாகிவிட்டது, அனைத்து பணிகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN