நெல்லை ஆற்றுப் பாலத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம் - போலீசார் தீவிர விசாரணை
திருநெல்வேலி, 13 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஒன் டூ ஒன் அரசு விரைவு பேருந்து 32 பயணிகள் உடன் புறப்பட்டு சென்றது. நெல்லை செல்லும் சாலையில் வேட்டைக்காரன்குளம் பகுதியில் சென்று கொண்டி
நெல்லை ஆற்றுப் பாலத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து 30 பேர் படுகாயம் - போலீசார் தீவிர விசாரணை


திருநெல்வேலி, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஒன் டூ ஒன் அரசு விரைவு பேருந்து 32 பயணிகள் உடன் புறப்பட்டு சென்றது.

நெல்லை செல்லும் சாலையில் வேட்டைக்காரன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து அருகில் உள்ள அமுதகன்னி ஆற்றுப் பாலத்தின் அருகில் தடுப்பு சுவரை இடித்து கொண்டு சென்று 10 அடி ஆழத்தில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பயணிகள் சிக்கி கொண்டு அலறினர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக குற்றாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b