Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் மற்றும் இறுதி நாளான இன்று பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இன்று முறைப்படி சீனாவிடம் இந்தியா ஒப்படைக்கிறது.
இதன்படி இன்று காலை பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் டெல்லி பாரத் மண்டபத்திற்கு வருகை தருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து பிரிக்ஸ் தலைவர்களும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த குழு புகைப்படம் உலக நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் பறைசாற்றும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்த சந்திப்புகள் கவனம் செலுத்தும் என தெரிகிறது.
இரண்டாம் நாள் மாநாடு மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை கட்டமைத்தல் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது, நிலையான வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்கின்றனர்.
விவாதங்களின் இறுதியில், மாநாட்டின் முக்கிய அம்சமான புதுடெல்லி பிரகடனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
இந்த பிரகடனம் பிரிக்ஸ் நாடுகளின் எதிர்கால கூட்டு செயல்பாடுகளுக்கான வழிகாட்டியாக அமையும் என கருதப்படுகிறது.
இதனுடன் பிரிக்ஸ் உச்சி மாநாடு இனிதே நிறைவு பெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b