Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி நீர்தான். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே லட்சக்கணக்கான ஏக்கரில் சம்பா, குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரை திறந்து வைத்தனர்.
அணையிலிருந்து வந்த காவிரி நீர் படிப்படியாக அனைத்து டெல்டா மாவட்டங்களையும் கடந்து, இறுதியாக கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் பொங்கி வருவதை கண்டதும், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி தாய்க்கு மலர் தூவி, பூஜை செய்து உற்சாகமாக வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைமடை வரை தண்ணீர் வந்தடைந்ததன் மூலம், இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடையும் எனவும், விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளதாகவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b