Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, செப்டம்பர் 13 (ஹி.ச.)
இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை பத்திரிகைத்துறையின் பலமாக மாற்றி, தனித்துவமான பன்மொழி செய்திச் சேவை மாதிரியை இந்துஸ்தான் சமாச்சார் உருவாக்கியுள்ளது என, அதன் குழுமத் தலைவர் அரவிந்த் பாலச்சந்திர மார்டிகர் தெரிவித்தார்.
இந்தி தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் காந்தி ஆய்வு பீட அரங்கில் நடைபெற்ற ‘இந்திய மொழி சங்கமம்-2026’ நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்துஸ்தான் சமாச்சார் சார்பில் ‘இந்திய அறிவு மரபு, பிராந்திய மொழிகள் மற்றும் வளமான இந்தியா’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துஸ்தான் சமாச்சார் தற்போது 14 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 15 மொழிகளில் ஒரே நேரத்தில் செய்திகளை வழங்கி வருவதாக அரவிந்த் மார்டிகர் தெரிவித்தார்.
இந்தியா போன்ற பன்மொழி மற்றும் பன்முக கலாச்சார நாட்டில் பல மொழிகளில் செய்திகளை வழங்குவது பத்திரிகைத்துறையின் சாதனை மட்டுமல்ல; மொழியியல் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் வெளிப்பாடாகவும் உள்ளது என்றார்.
இந்திய மொழிகள் வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் அல்ல. அவற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அறிவு, கலாச்சாரம், வரலாறு மற்றும் சமூக அனுபவங்கள் அடங்கியுள்ளன.
இந்துஸ்தான் சமாச்சார், இந்தப் பன்முகத்தன்மையை தனது பலமாக மாற்றி, பல்வேறு மொழிச் சமூகங்களை ஒரே தகவல் தளத்தின் மூலம் இணைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
சிவராம் சங்கர் ஆப்டே, சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களின் சொந்த மொழியில் சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், சுதந்திரவீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அதன் முக்கிய உந்துசக்திகளில் ஒருவராக இருந்ததாகவும் அரவிந்த் மார்டிகர் தெரிவித்தார்.
1962ஆம் ஆண்டு சீனப் போரின்போது உள்ளிட்ட பல முக்கியமான காலகட்டங்களில் இந்துஸ்தான் சமாச்சார் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றியது. தேவநாகரி எழுத்தில் டெலிபிரிண்டர் சேவையைத் தொடங்கியதும் நிறுவனத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும்.
அவசரநிலை காலத்திலும், பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும் ஊழியர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களின் நம்பிக்கையால் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு, மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்றார்.
இந்துஸ்தான் சமாச்சார் இனி இந்தியாவுக்குள் மட்டும் தனது செயல்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும், உலகளவில் தனது இருப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரவிந்த் மார்டிகர் தெரிவித்தார்.
ரஷ்ய செய்தி நிறுவனத்துடன் இணைந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய செய்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பிரிக்ஸ் அமைப்புடன் தொடர்புடைய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு, நம்பகமான செய்தி நிறுவனமாக தனது பங்கை மேலும் விரிவுபடுத்துவதே இலக்கு என்றார்.
பிரசார் பாரதி, தூர்தர்ஷன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்துஸ்தான் சமாச்சாரின் செய்திச் சேவையைப் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், செய்தி இணையதளங்கள் மற்றும் சுமார் 350 செய்தித்தாள்களும் அதன் செய்திகளைப் பயன்படுத்துகின்றன.
இதனுடன், ‘நவோத்தான்’ என்ற இந்திய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட மாத இதழையும், சமகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ‘யுக்வார்த்தா’ என்ற இருவார இதழையும் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
பத்திரிகைத்துறையில் அரசியல் மற்றும் குற்றச் செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், கல்வி, கலாச்சாரம், சமூகப் பணிகள், புதுமைகள், கலை மற்றும் வளர்ச்சி சார்ந்த நேர்மறையான செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரவிந்த் மார்டிகர் வலியுறுத்தினார்.
இளம் தலைமுறையை இந்திய வரலாறு மற்றும் அறிவு மரபுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சமூகத்தில் நடைபெறும் முக்கியமான மற்றும் நேர்மறையான பணிகளை மக்கள் அருகிலுள்ள இந்துஸ்தான் சமாச்சார் அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவற்றை பரந்த செய்தித் தளத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
‘இந்திய மொழி சங்கமம்-2026’ நிகழ்ச்சியின் மூலம், மொழி என்பது வெறும் அடையாளத்திற்கான கருவி மட்டுமல்ல, அறிவு, தகவல் மற்றும் வளர்ச்சிக்கான சக்தி என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்திய மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தை நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு ஊடகங்களுடன் இணைப்பதன் மூலம், உலகளாவிய அறிவு விவாதங்களில் இந்திய மொழிகளுக்கு புதிய இடத்தை உருவாக்க முடியும்.
இந்துஸ்தான் சமாச்சாரின் 15 மொழிச் செய்திச் சேவை அதற்கான முக்கிய முயற்சியாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J