Enter your Email Address to subscribe to our newsletters

பாலக்காடு , 13 செப்டம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண் மற்றும் சிறுமியின் உடல்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில்,
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-மகளை கொலை செய்துவிட்டு மேற்கு வங்காளத்தில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பவானி ஆற்றில் கிடந்த உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரோனிதா (35), அவரது 4 வயது மகள் ஜோஹிதா என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுடன் அட்டப்பாடியில் தங்கியிருந்த பிரவோத் தாஸ் (37) என்பவர் கொலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
பிரவோத் தாசுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள பிளைவுட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது தன்னுடன் வேலை பார்த்த ஒருவரின் மனைவியான பிரோனிதாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து பிரோனிதாவையும், அவரது மகள் ஜோஹிதாவையும் அழைத்துக்கொண்டு பிரவோத் தாஸ் அட்டப்பாடிக்கு வந்தார். அங்கு 3 பேரும் ஒன்றாக தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரோனிதா கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். ஆனால், பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக சம்பவத்தன்று பிரோனிதாவுக்கும், பிரவோத் தாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவோத் தாஸ் கத்தியால் பிரோனிதாவையும், அவரது மகள் ஜோஹிதாவையும் வெட்டி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
உடல்களை ஆற்றில் வீசினார்
கொலை செய்த பின்னர் 2 பேரின் உடல்களையும் துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டிய பிரவோத் தாஸ், அவற்றை பவானி ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதற்கிடையே அவர் மேற்கு வங்காளத்தில் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பிரவோத் தாசை கைது செய்து பாலக்காட்டுக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாய்-மகளை கொலை செய்தது தொடர்பான தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பிரவோத் தாசை அட்டப்பாடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பிரவோத் தாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA