Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 செப்டம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா-எகிப்து இடையேயான உறவு நீண்ட கால வரலாற்றைக் கொண்டதாகும். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தூதர் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன.
கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம், எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி, பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்தார்.
அப்போது இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்பையும் அவர் மேற்கொண்டார்.
அதேபோல், பிரிக்ஸ் நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்த எகிப்து நீதித்துறை அமைச்சர் மஹ்மூத் எல்-ஷெரீப், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முழு உறுப்பினராக இணைந்தது.
இந்நிலையில், இந்தியா தலைமையில் நடைபெறும் 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டு நாள் அமர்வுகளிலும் எகிப்து அதிபர் எல்-சிசி பங்கேற்றுள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் எல்-சிசி சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக புதின் திருப்தி தெரிவித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதையும், அதன் கட்டமைப்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் புதின் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி-எகிப்து அதிபர் எல்-சிசி இடையேயான இன்றைய சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P