Enter your Email Address to subscribe to our newsletters

நாகாலாந்து, 13 செப்டம்பர் (ஹி.ச.)
நாகாலாந்து மாநிலம் தூயன்சாங் (Tuensang) மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என சந்தேகிக்கப்படும் மதுபானத்தை அருந்தியதால் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நாகாலாந்து காவல்துறை சார்பில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூயன்சாங் மாவட்டத்தில் உள்ள அரசு சிவில் மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், உயிரிழப்புக்கான காரணம் கள்ளச்சாராயம் அல்லது தரமற்ற மதுபானத்தை அருந்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் நாகாலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நாகாலாந்து காவல்துறை தலைமை இயக்குநர் ரூபின் சர்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கையில், தூயன்சாங் மாவட்டத்தில் இருந்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தூயன்சாங், மோன், மோகோக்சுங், லாங்லெங், கிபிரே, ஷமாடோர் மற்றும் நோக்லாக் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் மதுபானங்களை அருந்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிலைமை குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் வரை நாகாலாந்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என டிஜிபி ரூபின் சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நாகாலாந்தின் மதுவிலக்கு சட்டம் தொடர்பான விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது. நாகாலாந்து மதுபான முழுத் தடுப்புச் சட்டம், 1989 (Nagaland Liquor Total Prohibition Act, 1989) கடந்த 1990ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
மதுபானப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், குடும்ப வன்முறை மற்றும் மதுபானம் தொடர்பான குற்றங்களைக் குறைத்தல் உள்ளிட்ட சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தேவாலயம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் வலியுறுத்தலின் அடிப்படையிலும் இந்த மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், சட்டம் அமல்படுத்தப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறியதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. மதுவிலக்கு சட்டத்தின் செயல்பாடு குறித்து நாகாலாந்து சட்டப்பேரவையிலும் பல்வேறு கட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது கள்ளச்சாராயம் என சந்தேகிக்கப்படும் மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாகாலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் மற்றும் மதுபானத்தின் தன்மை குறித்து விசாரணை முடிவடைந்த பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P