Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருவதாகவும், அதனை உடனடியாக சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதாகவும், இதனால் செல்போன் வெளிச்சத்தில் அவர் பேட்டி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான, அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்து வருவதாகவும், இந்த நிலை கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோடைக்காலத்தில் தமிழகத்தின் உச்ச மின் தேவை 20,500 முதல் 21,000 மெகாவாட் வரை அதிகரித்த நிலையில், வெப்பம் தொடர்ந்து நீடிப்பதால் தற்போதும் அதே அளவிலான மின் தேவை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தைவிட இந்த ஆண்டு மின் தேவை சுமார் 4,000 மெகாவாட் அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப மின்சாரத்தை அரசு முன்கூட்டியே ஏற்பாடு செய்யாததே மின்வெட்டுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையிலும், மின்வெட்டு நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் செல்லும் மின்சாரக் கம்பிகள் தீப்பற்றி சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டதாகவும், போதிய பணியாளர்கள் இல்லாததால் மின்சார விநியோகத்தை சீரமைக்க 8 மணி நேரத்திற்கும் மேலானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டை சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டால் மக்கள் சந்தித்து வரும் சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாகவும் பயனுள்ள வகையிலும் நடவடிக்கை எடுத்து மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam