Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 14 செப்டம்பர் (ஹி.ச.)
ஹைட்ரா (HYDRAA) என்பது தெலங்கானாவில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேட்சல்-மல்காஜ்கிரி, ரங்காரெட்டி மற்றும் சங்காரெட்டி மாவட்டங்களில் வெளிவட்ட சாலை வரை உள்ள நீர்நிலைகள், அரசு நிலங்கள், பூங்காக்கள், திறந்தவெளிகள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இந்த அமைப்பு 12 ஏரிகளை புத்துயிர் பெறச் செய்வது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது, இதற்கான திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை அதிகரிக்க ஹைதராபாத்தில் டாப்ளர் வானிலை ரேடார் நிறுவ வேண்டும் என்றும் HYDRAA கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் அரசு ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு முகமையை (HYDRAA) பயன்படுத்தி ஏழை மக்களின் வீடுகளை மட்டும் இடித்து வருவதாகவும், செல்வாக்கு மிக்கவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகவும் பாஜக எம்எல்ஏ அல்லெட்டி மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
இன்று தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு HYDRAA-வை பயன்படுத்தி இந்த ஏழை மக்களின் வீடுகளை இடித்துள்ளது. இதே அரசு ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்துள்ளது.
இதே HYDRAA, மூசி பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் கட்டியதாகக் கூறி ஆதித்யா பில்டர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பெரிய மனிதர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு வேறு நீதி.
நிலம் கையகப்படுத்துதலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் தடயவியல் தணிக்கை அறிக்கை குறித்து வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் அந்த தணிக்கையின்படி, 13 ஆயிரம் கணக்குகளுக்கு பணத்தை சட்டவிரோதமாக மாற்றி 23 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை ஏன் அரசு பொதுவெளியில் வெளியிடவில்லை, அதன் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நாங்கள், பாஜக சார்பில் இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசத் தொடங்கியபோது எங்கள் மைக் துண்டிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் தரப்பை பேசி சட்டப்பேரவையை முடக்க முயற்சிக்கிறார்கள்.
நாங்கள் இந்த ஏழை மக்களுடன் துணை நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்காக போராடுவோம்.
என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b