Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, தேரோட்ட நிகழ்வுகளுடன் விழா களைகட்டியுள்ளது.
திருச்சியில் உள்ள மலைக்கோட்டை திருத்தலத்தில், தாயுமானவர் கோயிலின் நுழைவு வாயிலில் அருள்பாலிக்கும் மாணிக்க விநாயகருக்கும், மலை உச்சியில் வீற்றிருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. உச்சிப் பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
கோவையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறப்பு யாகம் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு மூலவர் விநாயகருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த விநாயகரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
சென்னையின் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. சென்னையில் மட்டும் விழா அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற 18,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
Hindusthan Samachar / vidya.b