Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 14 செப்டம்பர் (ஹி.ச.)
சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது திமுகவைச் சேர்ந்த சிலர் நாகரிக வரம்புகளை மீறி பேசியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், திமுக போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.
இது தவெகவிற்கு எதிரான கருத்து என்பதைவிட, திமுகவுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் திமுகவின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.
தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தன்னை மிகக் கடுமையாக விமர்சித்தவர்களைக் கூட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒருபோதும் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசியதில்லை, மிகுந்த நாகரீகத்துடனேயே பதிலளித்தார்.திமுகவினரின் இத்தகைய அநாகரீகமான பேச்சுக்கள் இறுதியில் அவர்களுக்கு எதிராகத்தான் திரும்பும்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு ஆதரவாக விசிக பங்காற்றும். இடைத்தேர்தலில் பலமுனைப் போட்டி இருக்கலாம். ஜனநாயகம் அதற்கு இடம் தருகிறது. அதை ஆரோக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் இசைவு, ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையம் இதற்கு ஓர் உதாரணம்.
மக்களின் கருத்தின் அடிப்படையில்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b