Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்றும் மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாக முதலமைச்சர் விஜய் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி, திமுக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு பேசியிருந்தார்.
அந்த போராட்டத்தில் அவர் பேசிய பேச்சு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஏற்கனவே சேகர்பாபு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிதாக இந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b