Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வீரராகவராவ், மதுசூதன் ரெட்டி மற்றும் சி.பழனி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள், குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள், தீயணைப்பு மற்றும் மருத்துவ அவசர சேவைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோயில் வளாகம் மற்றும் ராஜகோபுரங்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குடமுழுக்கு நாளன்று பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b