Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 15 செப்டம்பர் (ஹி.ச.)
மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள நந்திகிராம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹசிராணி ரத்தை பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
ரெஜினகர் தொகுதியில் அக்கட்சியின் முன்னாள் முர்ஷிதாபாத் மாவட்டத் தலைவர் சகரவ் சர்க்கார் போட்டியிடுகிறார்.
சந்திரநாத் ரத், கடந்த மே 6-ம் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மத்யம்கிராமில் காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை முதலில் மாநில காவல்துறையும் சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்த நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே இந்த கொலை சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், சந்திரநாத் ரத்தின் தாயாரான ஹசிராணி ரத்தை நந்திகிராமில் பாஜக களமிறக்கியிருப்பது, தேர்தல் பிரசாரத்தில் அவரது மகனின் கொலை விவகாரத்தை முக்கியமான அரசியல் அம்சமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹசிராணி ரத் அரசியலில் ஏற்கனவே அனுபவம் கொண்டவர். 1998 முதல் அரசியலில் இருப்பதாகவும், இரண்டு முறை ஊராட்சி உறுப்பினராகவும், மூன்று முறை ஊராட்சி சமிதி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நந்திகிராம் தொகுதி சுவேந்து அதிகாரியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பின்னர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்து, நந்திகிராம் தொகுதியை ராஜினாமா செய்ததால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதேபோல், ரெஜினகர் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் முர்ஷிதாபாத் மாவட்டத் தலைவர் சகரவ் சர்க்கார் களமிறக்கப்பட்டுள்ளார். இரு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் அணிகளுக்கிடையேயான போட்டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தனித்துப் போட்டி ஆகியவற்றால் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
நந்திகிராம் மற்றும் ரெஜினகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P