Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பதி திருமலையில் நடைபெற உள்ள பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருகிற 17.09.2026 முதல் 30.09.2026 வரை பக்தர்களின் தேவைக்கேற்ப தினசரி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு திருப்பதி செல்லும் பக்தர்கள், இந்த சிறப்பு பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும், பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official App மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ