Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
வால்பாறை சட்டமன்ற தனித்தொகுதியில் போலியான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கூறி, அந்தத் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில சரிபார்ப்புக் குழு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் வால்பாறை தனித்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதாகர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வேட்பாளர் ஸ்ரீதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திமுக எம்.எல்.ஏ. சுதாகர் கிறித்துவ மதத்தைப் பின்பற்றி வரும் நிலையில், தேர்தல் வேட்புமனுவில் தன்னை இந்து பறையர் எனக் குறிப்பிட்டு, போலியான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனி தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிய சாதிச் சான்றிதழ் அவசியமான நிலையில், தவறான சான்றிதழை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கூறி, அவரது வெற்றியை ரத்து செய்வதுடன், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மாநில சரிபார்ப்புக் குழு
அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ