Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 செப்டம்பர் (ஹி.ச.)
புதுடெல்லி காவல்துறையின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டினர் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் தீபக் பங்கர், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கியிருந்த மத்திய டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஓட்டலின் மொட்டை மாடியில் இருந்து கண்காணிக்கும் ஸ்னைப்பர் மற்றும் ஸ்பாட்டர் குழுவின் ஒரு பகுதியாக அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தீபக் பங்கரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சில வீடியோக்கள் வெளியாகின. அதில், அவர் பிரிக்ஸ் மாநாட்டுக்கான அடையாள அட்டையை அணிந்தபடி தனது கைத்துப்பாக்கியை காட்டுவதும், மற்றொரு வீடியோவில் ஸ்னைப்பர் துப்பாக்கியின் தொலைநோக்கி மூலம் இலக்கை நோக்கிப் பார்ப்பதும் இடம்பெற்றிருந்தன.
வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அவை டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றன. பாதுகாப்புப் பணியில் இருந்தபோது ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்த காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து தீபக் பங்கர் பிரிக்ஸ் பாதுகாப்புப் பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P