Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச)
மதுரையின் அடையாளமாகவும், உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும் விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பரிவார மூர்த்திகள் மற்றும் இதர தெய்வங்களின் சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த சில நாட்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, புனித நீர் கலசங்களுக்கு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை காலை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளின் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ