Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஏஐ கேமராக்களில், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக பதிவானவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அவர்களின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்றிருந்த பிரசாத், வசந்த்குமார் மற்றும் ஒரு பெண் என 3 பேரின் முகங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் முன்வழக்கு குற்றவாளிகள் என தெரியவந்ததைத் தொடர்ந்து, விளக்குத்தூண் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் முன்வழக்கு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P