Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
சுதந்திரப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் புகழைப் போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததுடன், அவரது திருவுருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்ததும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு என பெருமையுடன் நினைவுகூர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை கிண்டி ஹால்டா அருகே அமைந்துள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு, தனது அறிவுறுத்தலின்படி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தியதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P