லண்டனில் தமிழக முதல்வர் விஜய்யின் தமிழ் சமூக சந்திப்பு பாதுகாப்பு காரணங்களால் ரத்து
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச) லண்டனில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தமிழ் சமூகத்தினரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, உள்ளூர் காவல்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப
லண்டனில் தமிழக முதல்வர் விஜய்யின் தமிழ் சமூக சந்திப்பு பாதுகாப்பு காரணங்களால் ரத்து


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச)

லண்டனில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தமிழ் சமூகத்தினரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, உள்ளூர் காவல்துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்பப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது பாதுகாப்பு காரணங்களையும், லண்டன் பெருநகர காவல்துறையின் கோரிக்கையையும் ரத்துக்கான காரணங்களாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

லண்டனில் வாழும் தமிழ் சமூகத்தினர் தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க ஆர்வத்துடனும், நெஞ்சம் நிறைந்த அன்புடனும் காத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், பொது பாதுகாப்பு கருதியும், லண்டன் பெருநகர காவல்துறையின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும், தமிழக முதல்வரும், வெற்றித் தலைவருமான அவர் உங்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே யாரும் அவரை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியேயோ அல்லது அவர் பயணிக்கும் வழித்தடங்களிலோ தமிழ் சமூகத்தினர் கூட வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மேம்பட்ட உற்பத்தி, மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் போன்ற துறைகளில் புதிய உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் உயர்மட்ட குழுவுக்கு தலைமை தாங்கி முதல்வர் விஜய் ஐக்கிய இராச்சியத்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், தமிழகத்தை ஆசியாவின் முன்னணி முதலீட்டுக்கு உகந்த இடமாக நிலைநிறுத்தும் மாநில அரசின் இலக்கை முன்னேற்றுவதும் இந்த வெளிநாட்டு பயணத்தின் நோக்கமாகும்.

விஜய் தலைமையிலான நிர்வாகத்தின் முதல் 100 நாட்களுக்குள் எட்டப்பட்ட பெரும் பொருளாதார மைல்கல்லைத் தொடர்ந்து இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை உறுதி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

Hindusthan Samachar / vidya.b