Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 16 செப்டம்பர் (ஹி.ச.)
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 27 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெப்பநிலை குறைந்து மழைக்காலம் தொடங்கும் காலகட்டங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். தற்போது வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 27 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் தாமாகவே மருந்துகளை உட்கொள்ளாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P