Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி , 17 செப்டம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி வாரணாசியில் நடைபெற்ற ‘காசி-வட்நகர் சேவா சங்கல்ப் அபியான்’ நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
ருத்ராட்ச் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
அவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
‘ஹர ஹர மகாதேவ்’ என முழக்கமிட்டு தனது உரையை தொடங்கிய சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துரைத்தார்.
மோடியின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் வகையில் ‘VKS’ என்ற புதிய மந்திரத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
‘V’ என்பது மோடியின் பிறந்த இடமான வட்நகரையும், ‘K’ என்பது அவரது கர்ம பூமியான காசியையும், ‘S’ என்பது அவர் பிறந்த செப்டம்பர் 17-ந் தேதியையும் குறிக்கும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, ரெயில் நிலையத்தில் தேநீர் விற்று, கடின உழைப்பால் நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடியின் வாழ்க்கை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மோடி தலைமையிலான ஆட்சியில் ஏராளமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
பாதுகாப்பு, விண்வெளி, டிரோன், செமிகண்டக்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
காசியில் பாலாஜி கோவில்
காசியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்க விரும்புவதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, இதற்காக 5 முதல் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதை பாராட்டிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டார்.
மேலும், அமராவதி மற்றும் போலவரம் திட்டங்களில் மத்திய அரசு ஆந்திராவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியின் உறவு வலுவாக இருப்பதாகவும், எதிர்காலத்திலும் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் பேச்சை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
அவரது உரை முடிந்ததும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA