Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)
“பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என காவல்துறையினர் முன்னிலையில் இரு இளைஞர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தமிழக காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காவல்துறையினர் சூழ்ந்திருந்த நிலையில் இரு இளைஞர்கள் பயங்கரவாத தொனியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் காணொலியை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
“பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தை கேட்டு கொதித்தெழும் அளவுக்கு அந்த இளைஞர்களின் சிந்தனை எவ்வாறு மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுவதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையினர் முன்னிலையிலேயே இதுபோன்ற மிரட்டலை விடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு யார் தைரியம் அளித்தது என்றும், தமிழக இளைஞர்களை தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னணியில் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களின் பின்னணி மற்றும் அவர்களின் சிந்தனை குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை பாஜக சார்பில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P