Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச)
மலேசியாவில் படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் தனது கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகவும், இதனால் தனது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த காணொளி பரவலாக பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சமூக நீதித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் பாரதிதாசன் பயிலும் பல்கலைக்கழகத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது சேர்க்கை தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ பதில் கிடைத்தவுடன், மாணவருக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் சமூக நீதித்துறை உறுதியளித்துள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எந்தவித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b