Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 18 செப்டம்பர் (ஹி.ச.)
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனை 18.9 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏ.டி.எம். மூலம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 103 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றது.
இது 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 298 கோடியாகவும், 2024-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 318 கோடியாகவும் குறைந்தது.
தொடர்ந்து 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 955 கோடியாக குறைந்த ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனை, நடப்பாண்டு ஜூலை மாதத்தில் மேலும் சரிந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 592 கோடியாக உள்ளது.
இதன்படி, 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனை ரூ.51 ஆயிரத்து 511 கோடி குறைந்துள்ளது. இது 18.9 சதவீத வீழ்ச்சியாகும்.
சில்லறை விற்பனை முதல் பெரிய அளவிலான வர்த்தகம் வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பது மற்றும் பணப்பரிவர்த்தனை செய்வது படிப்படியாக குறைந்து வருவது ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA