Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ராயபுரத்தில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக TANGEDGO தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருக்கிறது
அதில்,
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110 கே.வி. ஆர்.கே. நகர் துணை மின் நிலையத்தில், நேற்று இரவு 23.22 மணியளவில் 11 கே.வி. மின்ட் மின்பாதையில் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக பழுது கண்டறியும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று வழியில் மின்சாரம் வழங்க, 33 கே.வி. ஸ்டான்லி துணை மின் நிலையத்தின் 11 கே.வி. வள்ளலார் நகர் மின்னூட்டி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூடுதல் மின் சுமையினால் ஸ்டான்லி துணை மின் நிலையத்தில் பழுது ஏற்பட்டு மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டது.
மேற்கண்ட பழுது 01.30 மணியளவில் சரிசெய்யப்பட்டு அனைத்து 11 கே.வி. மின்பாதைகளிலும் மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும், 11 கே.வி. வள்ளலார் நகர் மின் பாதையில் பல இடங்களில் ஜம்பர் பழுதுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அவையும் உடனடியாக சரிசெய்யப்பட்டன. அனைத்து சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 11 கே.வி. வள்ளலார் நகர் மின்பாதையில் அதிகாலை 02.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN