Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
வாழப்பாடி வைத்திய படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மொட்டையன். இவரது மனைவி சாந்தா (50). இவர் அப்பகுதியில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சாந்தா வீட்டில் சமையல் செய்வதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துவிட்டு, வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிலிண்டர் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி, கூரை முழுவதும் தீ பரவியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தா, அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கூரை வீடு மற்றும் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீப்பற்றியதா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam