இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் - தி.மு.க எம்.பி கனிமொழி புகழஞ்சலி
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) சமூகச் சீர்திருத்தவாதியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய முன்னோடியுமான இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கன
கனிமொழி


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சமூகச் சீர்திருத்தவாதியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய முன்னோடியுமான இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான இரட்டைமலை சீனிவாசனின் நினைவைப் போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் 1859-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தார். 1891-ஆம் ஆண்டு பறையர் மகாஜன சபையை தொடங்கிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்காக 1893-ஆம் ஆண்டு ‘பறையன்’ என்ற இதழையும் தொடங்கினார்.

கல்வி உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு உள்ளிட்ட சமூகநீதிக் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார்.

அரசியல் ரீதியாகவும் அவர் முக்கிய பங்காற்றினார். லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல் எழுப்பினார். 1932-ஆம் ஆண்டு காந்தி–அம்பேத்கர் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்திலும் இரட்டைமலை சீனிவாசன் கையெழுத்திட்டார்.

தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டத்தைப் பாராட்டி, 2026 ஜூலை 7-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் புகழஞ்சலி செலுத்தியிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் தீண்டாமை ஒழிப்புக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1945-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இரட்டைமலை சீனிவாசன் மறைந்தார். அவரது நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam