Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 18 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானாவில் 22-ஏ பிரிவின் கீழ் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தனது அறிக்கையில் கூறியதாவது:
3 உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவின் தலைவராக சி.சி.எல்.ஏ. கமிஷனர் லோகேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை செயலாளர் பாபிரெட்டி மற்றும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை ஐ.ஜி. ராஜீவ் காந்தி ஹனுமந்து ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
22-ஏ தடை பட்டியலில் உள்ள நிலங்கள் தொடர்பாக நில உரிமையாளர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களை இந்த குழு ஆய்வு செய்யும். மேலும், கள அளவில் நில உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காண தேவையான செயல்திட்டத்தை வகுக்கும்.
22-ஏ தடை பட்டியலில் பல ஆண்டுகளாக நிலங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றை விற்பனை செய்வது மற்றும் பதிவு செய்வதில் நில உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால், தங்களது நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அரசு அமைத்துள்ள உயர் மட்ட குழு மூலம் 22-ஏ தடை பட்டியல் நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதனால் நில உரிமையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாஸ் ரெட்டி ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA