Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 19 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக பரவி வரும் தகவல்களை முன்னாள் அமைச்சர் ரோஜா கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் மிகவும் புனிதமானவை. அரசியல் ஆதாயத்துக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுடன் விளையாடுவதை கூட்டணி கட்சியினர் நிறுத்த வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்ததாக கூறி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது விஷப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தரநிலைகளுக்கு உட்படாத நெய் டேங்கர்கள் கண்டறியப்பட்டபோது அவை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட நெய் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படவில்லை.
அவ்வாறு இருக்கும்போது, லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறுவது பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.
ஏழுமலையான் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுடன் அரசியல் காரணங்களுக்காக விளையாடக்கூடாது.
இவ்வாறு ரோஜா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA