Enter your Email Address to subscribe to our newsletters

லடாக், 19 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது 4 பேர் உயிரிழந்ததன் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பெரிய அளவில் போராட்டங்களை நடத்த லடாக்கின் அரசியல் குழுக்கள் திட்டமிட்டிருந்தன.
ஆனால், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும், லடாக்கில் நிலவும் கடும் குளிர் காரணமாகவும் போராட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.
இதற்கு பதிலாக, செப்டம்பர் 23ஆம் தேதி லே பகுதியில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு அடையாள நடைபயணமும், கார்கிலில் பேரணியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு நீண்ட நடைபயணத்துக்கு பதிலாக 20 கிலோமீட்டர் அடையாள நடைபயணமாக மாற்றப்பட்டுள்ளதாக லே உச்ச அமைப்பின் உறுப்பினரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாகவும் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்கிலில் இருந்து லே நோக்கி இன்று தொடங்கவிருந்த நீண்ட நடைபயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் இணைத் தலைவர் சஜ்ஜாத் கார்கிலி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் முதல் வாரத்தில் கார்கிலில் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் செப்டம்பர் 23ஆம் தேதி கார்கிலில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
லடாக்கிற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின் கீழ் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
‘சுய் ஜெனெரிஸ்’ எனப்படும் தனித்துவமான நிர்வாக மாதிரியை லடாக்கில் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P