Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள மேக்ஸ் அப்பார்ட்மெண்ட்டின் நான்காவது மாடியில், லிப்டில் சிக்கிக் கொண்ட 75 வயது மூதாட்டி தீயணைப்புத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்டில் ராஜேஸ்வரி என்ற 75 வயது மூதாட்டி சென்றபோது, லிப்ட் திடீரென பழுதடைந்து நான்காவது மாடியில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. லிப்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அவர், இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மதுரை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றனர். ஜீவ மாணிக்கம் உள்ளிட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, லிப்டின் கதவை பாதுகாப்பாக திறந்து, உள்ளே சிக்கியிருந்த ராஜேஸ்வரியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட மூதாட்டிக்கு தேவையான முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ