Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் மேலபூவந்தி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது மகன் செல்லத்துரை (21). இவர் மேலூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் உள்ள தனது அக்கா செல்விப்பிரியா வீட்டில் தங்கி, தனது சித்தப்பா முருகன் நடத்தி வரும் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது அக்காவிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு செல்லத்துரை சென்றுள்ளார்.
இதையடுத்து, இன்று அதிகாலை மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம், தனது சித்தப்பாவின் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை அருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் செல்லத்துரை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லத்துரையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக செல்லத்துரை தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று, படுகொலை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam