Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் புதூரைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அகத்தியர் என்ற பகுதியில் வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, முருகனை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
தாக்குதலை நடத்திய கும்பல் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் குறித்து முதற்கட்ட தகவலில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த முன்விரோதத்தின் காரணமாகவே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b