Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச)
தமிழ்நாட்டில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்குக் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
செவிலியர் பற்றாக்குறையை போக்கவும், மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், நர்சிங் கல்வி அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், பிற மாவட்டங்களிலும் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இடங்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
இத்துடன் தமிழகத்தில் சுகாதாரத் துறையை வலுப்படுத்த கூடுதலாக 2,500 புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b