Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச)
சென்னையில் செயல்பட்டு வரும் ஏ.ஆர்.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை முழுவதும் ஏ.ஆர்.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 15-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் வருமான வரி தொடர்பான சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை சாலையில், பெரவலூர் பகுதியில் அமைந்துள்ள ஏ.ஆர்.சி. கருத்தரிப்பு மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கருத்தரிப்பு மையத்திற்குள் சென்று ஆவணங்கள் மற்றும் வருமான வரி தொடர்பான கணக்கு விவரங்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணக்கு விவரங்கள் மற்றும் பிற நிதி தொடர்பான பதிவுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஏ.ஆர்.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான பல்வேறு கருத்தரிப்பு மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை நிறைவடைந்த பின்னரே, சோதனைக்கான காரணம் மற்றும் இதில் கிடைத்துள்ள தகவல்கள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ