Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச)
சட்டசபையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பல்வேறு தொகுதிகளில் நிலவும் மின்சாரப் பிரச்சனைகள் குறித்து எம்.எல்.ஏக்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
கொரடாச்சேரி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பூண்டி தொகுதி எம்.எல்.ஏ கலைவாணன் குற்றம்சாட்டினார். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் இன்னும் முறையான மின் வசதி சென்று சேரவில்லை என்றும், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை அமைத்துத் தர வேண்டும் என்றும் எம்.எல்.ஏ செல்லசாமி வலியுறுத்தினார்.
எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கொரடாச்சேரி பகுதியில் ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனை குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மலை கிராமங்களில் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாகவும் கள ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றார்.
மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆண்டு மட்டும் 6000 டிரான்ஸ்பார்மர்களை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சட்டசபையில் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b