Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச)
தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் விதிகளை சுட்டிக்காட்டி அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் நிலையில், மற்றொரு கட்சியான தவெக-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் அவர்கள் இடம்பெற்றிருப்பது எந்த சட்ட அடிப்படையில் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் 77(1)-வது பிரிவு மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, ஒரு கட்சி தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களையே நட்சத்திரப் பேச்சாளர்களாக நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியான 7 நாட்களுக்குள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் அல்லது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த காலக்கெடு முடிந்த பின்னர் புதிதாக விண்ணப்பித்து நட்சத்திரப் பேச்சாளர் தொடர்பான செலவு விலக்கைப் பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது சொந்த கட்சித் தலைவர்கள் அல்லது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையில் தவெக வேட்பாளர்களுக்காக அவர்கள் பிரசாரம் செய்தால், நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான செலவு விலக்கு அவர்களுக்கு பொருந்தாது என்றும் இன்பதுரை கூறியுள்ளார்.
அவ்வாறு பிரசாரம் செய்யப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பிரசாரச் செலவுகள் அனைத்தும் தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், T. Paulraj v. Election Commission of India வழக்கில் தேர்தல் ஆணையம் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ள இன்பதுரை, பிரசாரச் செலவுகள் வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாமல், அதன் மூலம் சட்டபூர்வ தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் 123(6)-வது பிரிவின் கீழ் அது முறைகேடான தேர்தல் நடைமுறையாகும் என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ