Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயில்
(வண்டி எண்: 22675) புறப்பட்டது.
ரயில் மெதுவாக நகரத் தொடங்கியபோது, ஆண் பயணி ஒருவர் ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியில் அவசரமாக ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறியதில், அவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையேயான பகுதியில் சிக்கி, ஆபத்தான நிலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக் கவனித்த நடைமேடை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த RPSF 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் தீபக், உடனடியாக விரைந்து செயல்பட்டார். கண் இமைக்கும் நேரத்தில் பயணியை நோக்கிப் பாய்ந்த அவர், அவரைப் பிடித்து இழுத்து பத்திரமாக மீட்டார்.
காவலர் தீபக்கின் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதுடன், பயணியின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் ரயில் இயக்கத்தில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு பயணியின் உயிரைக் காப்பாற்றிய RPSF காவலர் தீபக்குக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் சக பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P