Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல் , 20 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக ராட்சத மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நீண்டகாலமாக நின்று கொண்டிருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது.
மரம் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து சாலையில் சரிந்து விழுந்தது.
இந்த எதிர்பாராத விபத்தால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மின்கம்பம் சாய்ந்து விழுந்ததுடன் மின் கம்பிகளும் அறுந்து தொங்குவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இருள் சூழ்நிலையால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நவீன உபகரணங்கள் மூலம் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்து விரைந்து மின் இணைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b