Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 செப்டம்பர் (ஹி.ச)
பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவரான கே. அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகிச் சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
இந்த அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மதுரையின் வாழ்வாதாரமான வைகை நதியைப் பாதுகாக்கும் நோக்கில் தீவிரத் தூய்மைப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்துள்ள அந்த அமைப்பின் தன்னார்வலர்கள், வைகை ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றின் இரு கரைகளிலும் பரவிக் கிடக்கும் கழிவுகளை அகற்றி, ஆற்றின் இயற்கை ஓட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.
இந்த தூய்மைப் பணிக்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக தலைமை தாங்கி வருவது தன்னார்வலர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. தன்னார்வலர்களுடன் இணைந்து அவரே களத்தில் இறங்கி குப்பைகளை அகற்றி வருகிறார்.
வைகை ஆற்றை பாதுகாப்பது என்பது வெறும் தூய்மைப் பணி மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறைக்கான நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் பணி என்ற நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தன்னலமற்ற சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b