Enter your Email Address to subscribe to our newsletters


நெல்லை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, சில மாதங்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜினாமா செய்த பதவியை மீண்டும் வழங்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், “அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள்” என்ற பெயரில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இசக்கி சுப்பையாவுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில், “ஊரே சிரிக்குது உன்னை பார்த்து... அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத ஓடுகாலி இசக்கி சுப்பையாவே... உனக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி ஒரு கேடா?” என கடுமையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு எதிராக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுவரொட்டிகளை ஒட்டியது யார் என்பது குறித்தும், இதன் பின்னணி குறித்தும் அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ