Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் இன்று அறிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாவது,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும்.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.
இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கபடுவார்கள்.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான இடம் தேர்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து பேரவையில் உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b