Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
மேற்கு மாம்பலம் ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோவில் சுற்றியுள்ள கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தவர்களிடம் ரூ.25.29 லட்சம் வாடகை பாக்கி உள்ள நிலையில், அதில் ரூ.1.42 லட்சத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு, மீண்டும் அவர்களையே வாடகைதாரர்களாக தொடர அனுமதிக்க அறநிலையத்துறை முயற்சிப்பது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு அன்னதானக் கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அறநிலையத்துறை தனது நிலைப்பாட்டை மாற்றியது குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்தது.
செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
வழக்கை சி. ஜனார்த்தனன் தொடர்ந்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ