Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 9,000 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்வரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று தொடர்ந்து 20-வது நாளாக நீடித்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் காவிரி ஆற்றின் அழகை பாதுகாப்பான இடங்களில் இருந்து பார்வையிட்டு வருகின்றனர். காவிரி ஆற்றின் நீர்வரத்து நிலவரத்தை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து மேலும் குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பின்னர் பரிசல் இயக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam