Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச)
சென்னையில் உள்ள பிரபல கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கருத்தரித்தல் மையங்களில் பெருமளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையானது சென்னை மட்டுமின்றி மதுரையிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரு நகரங்களிலும் சேர்த்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை எழும்பூர், மதுரவாயல், வேளச்சேரி, மாதவரம், சேத்துப்பேடு, பெரம்பூர், அடையாறு, தரமணி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் பிரபல கருத்தரிப்பு மையங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
குறிப்பாக அடையாறு, தரமணி, வேளச்சேரி பகுதிகளில் உள்ள மையங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக அதிகாரிகள் முகாமிட்டு ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
சோதனையின் போது அந்த மையங்களின் வரவு செலவு கணக்குகள், நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b