Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் கோயில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.
வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துச் சென்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கோயில் நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதே போல் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
Hindusthan Samachar / vidya.b