Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் குழு தூய்மைப் பணியாளர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5 மற்றும் 6-க்கு உட்பட்ட தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் தான் இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர் சங்க நிர்வாகிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்குவதற்கும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b